search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி கோவிலில் கும்பாபிஷேகம் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் நடத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு
    X

    பழனி கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    பழனி கோவிலில் கும்பாபிஷேகம் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் நடத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

    • பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
    • பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ, கலெக்டர் விசாகன், எஸ்.பி பாஸ்கரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் விழா நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக பணிகள் குறித்து நாளை மதியம் துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்த உள்ளேன். கும்பாபிஷேக பணியில் மேலும் 4 இணைஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் கோவில் பணியாளர்களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மீக புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறைந்த விலையில் இந்த நூல்கள் பக்தர்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய நல்ல நாளாகும்.

    பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    மேலும் பழனி-இடும்பன் மலைக்கோவில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களில் வானத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் மலர்களை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி வையாபுரி குளம் தூர்வாரப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அதுகுறித்த அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×