search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி மலையடிவாரத்தில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்
    X

    பழனி மலையடிவாரத்தில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்

    • கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.

    இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.

    இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Next Story
    ×