search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடக்கோரி கூடலூரில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
    X

    சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடக்கோரி கூடலூரில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

    • சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தமிழக அரசு சூழல் உணர்திறன் திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி:

    நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பக எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதாக கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

    இது தொடர்பாக ஆய்வு நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

    சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, புத்தூர் வயல், அள்ளூர் வயல் உள்பட பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடவேண்டும். மேலும் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

    நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் ஸ்ரீமதுரை பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூருக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புதிய பஸ்நிலையம் முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி திடலுக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தொகுதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக கூடலூர் வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை கடைகள், செல்போன் கடைகள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை வீதிகள், முக்கிய பகுதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

    அப்போது அவர் கூறுகையில், சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

    இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அ.தி.மு.க சார்பில் கண்டன பேரணி நடக்க உள்ளது. இதேபோல் அடுத்த மாதம் 5-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கூடலூர் காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×