மார்த்தாண்டத்தில் கணவருடன் சென்ற பேராசிரியையிடம் 16 பவுன் நகை பறிப்பு

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டத்தில் கணவருடன் சென்ற பேராசிரியையிடம் 16 பவுன் நகை பறிப்பு
Published on

குழித்துறை:

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கல்லூரி விடுமுறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மார்த்தாண்டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறுவனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்ம மனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீசாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com