என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட குழந்தையுடன் மேஸ்திரி மாணிக்கம் மற்றும் தாய் ஜெயசுதா.
தனக்கு பிறக்கவில்லை என்று ஆத்திரம்- 2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மேஸ்திரி
- உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.
- மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அதே மருத்துவமனையில் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.
மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இச்சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.






