கும்மிடிப்பூண்டி பெண் கவுன்சிலர்-மகன் கடத்தலில் ஆந்திராவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது

கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பெண் கவுன்சிலர்-மகன் கடத்தலில் ஆந்திராவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

இவரது மனைவி ரோஜா. இவர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜேக்கப். கல்லூரி மாணவர்.

கடந்த 24-ந்தேதி காலை வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே மர்ம கும்பல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறி அன்று இரவே கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப்பும் திரும்பி வந்தனர்.

இது தொடர்பாக பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர், தனது கூட்டாளிகளான கும்ப்ளியை சார்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் சுதிர் பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (30), நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் (28), ராச பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோருடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு ரமேஷ் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெறுவதற்காக சென்றபோது மின் இணைப்பு வாங்க விடாமல் ரமேஷ் தடுத்ததாகவும் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ரமேசை மிரட்டுவதற்காக அவரது மனைவி மற்றும் மகனை சுரேந்தர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி உள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் விட்டுச்சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக பீகார் சென்று கள்ள கைத்துப்பாக்கி ஒன்றையும் வாங்கி உள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பாக தலைமறைவாக உள்ள சந்திரசேகர் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com