search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே வீட்டில் கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது
    X

    திண்டுக்கல் அருகே வீட்டில் கிளினிக் நடத்திய போலி பெண் டாக்டர் கைது

    • கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது.
    • பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை டாக்டர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இவர் பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×