search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இன்று அதிகாலை வீடு புகுந்து வர்க்கி வியாபாரியை தாக்கி நகை-பணம் கொள்ளை
    X
    முகமூடி கும்பலால் தாக்கப்பட்ட குணசேகரன்.

    ஈரோட்டில் இன்று அதிகாலை வீடு புகுந்து வர்க்கி வியாபாரியை தாக்கி நகை-பணம் கொள்ளை

    • முகமூடி கும்பல் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் மீது துணிகளை கொண்டு மூடி மறைத்து விட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் குணசேகரன்(58). மாட்டு வண்டியில் ஊட்டி வர்க்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் முன்னாள் பா.ஜ.க பிரமுகர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் . 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    கணவன்- மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். குணசேகரன் தோட்ட வீட்டில் தங்கி இருந்தார். இவரது வீட்டின் அருகே ரிங் ரோடு உள்ளது. இந்த பகுதியில் வீடுகள் சற்று தள்ளி தள்ளியே உள்ளது. இந்நிலையில் பானுமதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பங்கேற்க வெளியூர் சென்று விட்டார். குணசேகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.25 மணி அளவில் 3 முகமூடி கும்பல் குணசேகரன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த குணசேகரனை அந்த மர்ம நபர்கள் மம்மட்டி கைப்பிடியை கொண்டு தாக்கினர். பின்னர் வீட்டில் உள்ள நகை-பணத்தை கொண்டு வர வில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்து போன குணசேகரன் பீரோல் சாவியை அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். முன்னதாக முகமூடி கும்பல் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் மீது துணிகளை கொண்டு மூடி மறைத்து விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் குணசேகரனின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டையால் தாக்கியதில் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரன் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×