search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்னி பஸ்சில் பாய்ந்து என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    ஆம்னி பஸ்சில் பாய்ந்து என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை- போலீசார் விசாரணை

    • தனது கண் முன்னே தன்னுடைய மகன் பஸ்சில் விழுந்து இறந்ததை பார்த்த மாரியப்பன் கதறி துடித்தார்.
    • மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாலேயே பஸ்சில் பாய்ந்து புகழேந்தி பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருமங்கலம்:

    விருதுநகரை சேர்ந்த மாரியப்பன். இவரது மகன் புகழேந்தி பாண்டியன் (வயது27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாக கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பணியை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அவர் தனது மன உளைச்சல் பாதிப்புக்கு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று அவர் சிகிச்சைக்காக தனது தந்தையுடன் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். சிகிச்சை முடிந்ததும் இரவில் இருவரும் தங்களின் ஊருக்கு காரில் சென்றனர். மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் சந்திப்பு பகுதியில் வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தி உள்ளனர்.

    அப்போது வாலிபர் புகழேந்தி பாண்டியன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது கையில் வெட்டிக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியப்பன், தனது மகனை தடுத்து நிறுத்தினார்.

    இதையடுத்து புகழேந்தி பாண்டியன் தனது தந்தையின் பிடியில் இருந்து தப்பி ரோட்டில் ஓடினார். அவர் அந்த வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ்சில் பாய்ந்தார். இதில் பஸ்சுக்குள் சிக்கிய புகழேந்தி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தனது கண் முன்னே தன்னுடைய மகன் பஸ்சில் விழுந்து இறந்ததை பார்த்த மாரியப்பன் கதறி துடித்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு புகழேந்தி பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாலேயே பஸ்சில் பாய்ந்து புகழேந்தி பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் பாய்ந்து என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×