search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    500 வாழக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் கூட்டம்
    X

    500 வாழக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் கூட்டம்

    • லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார்.
    • யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம் மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியதில் 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார். தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இரவு நேரத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×