search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் விலை ரூ.5.05 ஆக அதிகரிப்பு: 1 கோடி முட்டை உற்பத்தி குறைந்ததால்  விலை உயர்வு
    X

    கொள்முதல் விலை ரூ.5.05 ஆக அதிகரிப்பு: 1 கோடி முட்டை உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு

    • கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது.
    • தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி முட்டை விலை ரூ. 4.95-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 5.00 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை (பைசாவில்) சென்னை 560, பர்வாலா 517, பெங்களூரு 550, டெல்லி 533, ஐதராபாத் 510, மும்பை 570, மைசூர் 555, விஜயவாடா 533, ஹொஸ்பேட் 510, கொல்கத்தா 600.

    வழக்கமாக புரட்டாசி மாதம் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இதனால் கறி , முட்டை சாப்பிட மாட்டார்கள். இதனால் அதிக அளவில் கறி மற்றும் முட்டைகள் தேக்கம் அடையும், விலையும் குறையும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக முட்டை விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து தற்போது 505 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் முட்டை கோழி வளர்ப்பு குறைந்துள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    முட்டை விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது,

    நாமக்கல் மண்டலத்தில் வழக்கமாக 6 கோடிக்கும் அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்படும், தற்போது முட்டை கோழி தீவனம் விலை உயர்ந்துள்ளதால் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் 6 கோடிக்கும் மேல் முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது ஒரு கோடி முட்டை உற்பத்தி குறைந்து 5 கோடியாக சரிந்துள்ளது. இதனால் முட்டை விலை அதிகரித்து வருகிறது என்றனர்.

    Next Story
    ×