search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநில வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தை களை கட்டியது- சில்லரை விற்பனையும் அமோகம்
    X

    வெளி மாநில வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தை களை கட்டியது- சில்லரை விற்பனையும் அமோகம்

    • கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி)மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 230 தினசரி கடைகளும், 760 வார சந்தை கடைகளும் உள்ளன.

    கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது. திங்கட்கிழமை இரவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வரச்சந்தை நடைபெறும். இதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வந்து துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். அதே நேரத்தில் பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு ஜவுளிகளின் விலை குறைவாக இருப்பதால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது. குறிப்பாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. இதனால் ரூ.150 கோடி மதிப்பிலான துணிகள் குடோனில் தேங்கி இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல் நேற்று இரவு ஜவுளி சந்தை கூடியது.

    இந்த முறை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்தனர். இதனால் ஜவுளி சந்தை களை கட்டியது. மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடை பெற்றது.

    இதேபோல் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். தற்போது கோவில்களில் தொடர்ந்து விசேஷம் வருவதால் மஞ்சள், சிகப்பு கலர் துண்டு, வேட்டிகள், சேலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    சில்லரை வியாபாரம் இன்று மட்டும் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தது கோடை காலம் தொடங்கிவிடும் என்பதால் கோடை விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×