கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும்.தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தினசரி மார்க்கெட்டில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
தினசரி மார்க்கெட்டில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.

இதையடுத்து, கூடுதல் பஸ் நிலையத்தில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் வகையில், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், மார்க்கெட் குத்தகைதாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நகராட்சி சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது.

அப்போது அவர் பேசுகையில், கூடுதல் பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் பொறுப்பு பார்த்தசாரதி, தாசில்தார் சுசிலா, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகரமைப்பு அலுவலர் ரமேஷ்குமார், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நகராட்சி தினசரி மார்க்கெட்டில் தற்போது கடைகள் நடத்தி வரும் அனைத்து கடைக்காரர்களுக்கும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும்.

தினசரி மார்க்கெட் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், ஏற்கெனவே மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருபவர்களுக்கு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com