பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி

கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர். வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.
பொள்ளாச்சி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அடுத்த கரியாஞ் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது47). இவரது மனைவி ஈஸ்வரி(44).

இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோவில்பாளையத்தில் வசித்து வருகிறார்.

நாராயணனும், அவரது மனைவி ஈஸ்வரியும் இந்த பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர். அந்த பணத்தை வைத்து அந்த பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளனர்.

இதுதவிர மேலும் 2 தனியார் வங்கிகளிலும் இவர்கள் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது.

முதலில் இவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி பணத்தை முறையாக செலுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இவர்களால் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

இதையடுத்து வங்கியில் இருந்தும் இவர்களை தொடர்பு கொண்டு பணத்திற்கு வட்டி கட்டுமாறு கூறியதாக தெரிகிறது. பணத்தை கட்ட முடியாததால் கணவன், மனைவி 2 பேரும் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டனர்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த கணவன், மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.

இதற்கிடையே தாய், தந்தையை பார்ப்பதற்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தாய், தந்தை 2 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானார். அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாததால், கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com