வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தை முடக்க சதி

ஏரியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் பணிகள் நடந்து வருகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தேர்குணம் பஞ்சாயத்துக்குட்பட்ட முருக்கம் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணி மூலம் ஏரிகள் சீரமைக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியின் போது இந்த பணிக்கு மேற்பார்வையாளராக கோமதி என்பவர் செயலாற்றி வந்தார்.

அதன் பின்னர் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்த சிவரஞ்சனி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

ஆனால், இந்த திட்டத்தில் பணியாற்றுவதற்கு தி.மு.க. கிளை செயலாளர் கிருஷ்ணராஜ் என்பவர் இடையூறாகவும், 100 நாள் திட்டத்தை முடக்குவதாகவும் கூறி தி.மு.க.வை சேர்ந்த சிவரஞ்சனி ஆதங்கப்பட்டார்.

அதோடு கிளை செயலாளர் கிருஷ்ணராஜ், அ.தி.மு.க.வை சேர்ந்த கோமதிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி சிவரஞ்சனி தலைமையில் ஏராளமானோர் வானூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது பற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து தி.மு.க. கிளை செயலாளர் கிருஷ்ணராஜ் மீது கிளியனூர் போலீசில் சிவரஞ்சனி புகார் செய்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com