ஆபாசமாக பேசிய புகாரில் கல்லூரி தாளாளர் கைது: நர்சிங் மாணவிகளிடம் கலெக்டர் நேரில் விசாரணை

கல்லூரி தாளாளர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் கலெக்டர் மேகநாதரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்
நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் கலெக்டர் மேகநாதரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்
Published on

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தாளாளராக டாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48)என்பவர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவி, சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மேலும் கல்லூரி விடுதி செயல்படாததால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி மூடப்பட்டதால் தங்கள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது. கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேறு கல்லூரிகளில் இடம் இருந்தால் எங்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து பேசிய கலெக்டர் மேகநாத ரெட்டி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது பள்ளி தாளாளர் ,வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com