

போரூர்:
வானகரம், பைபாஸ் சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் தனியார் கல்லூரி வளாகம் அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த வாலிபருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார் ? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்து விட்டு சாலையோரம் உடலை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக வானகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.