search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை கண்டித்து பவானிசாகரில் நாளை போராட்டம் நடத்த முடிவு
    X

    பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை கண்டித்து பவானிசாகரில் நாளை போராட்டம் நடத்த முடிவு

    • கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மலைப்பகுதியில் பவானி ஆறு உற்பத்தியாகி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை வரை சுமார் 150 கிலோ மீட்டர் செல்கிறது. பவானி ஆற்று தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி பயணித்து வருகிறது.

    இந்த பவானி ஆறு நீலகிரி மாவட்டம் முக்காலியில் தொடங்கி அட்டப்பாடி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையை அடைகிறது. அந்த அணையில் திறந்து விடப்படும் பவானி ஆற்று தண்ணீர் அங்கு இருந்து தேக்கம் பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, மூலத்துறை வழியாக பவானிசாகர் அணையை அடைகிறது.

    பவானி ஆற்றின் தண்ணீரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இதன் மூலம் தொட்டப்பாளையம், திருப்பூர், எலத்தூர், நம்பியூர், பெருந்துறை என 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணை மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலக்கப்படுவாக கூறப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், குப்பை கழிவுகள் கலப்பதாகவும் தெரிகிறது. அதே போல் அந்த பகுதிகளை சேர்ந்த சிலர் ஆலை மற்றும் மருத்துவ கழிவுகளையும் பவானி ஆற்றில் நேரிடையாக கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கழிவுகளில் உள்ள ராசாயனங்களால் பவானி ஆற்றின் தண்ணீர் நஞ்சாகி மாசடைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுபடுவதால் ஆறு மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. பவானி ஆற்றில் கழிவுகளை கலப்பதை தடுக்க அரசு ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் பவானி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை அனுமதிக்க கூடாது. கழிவு கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் அமைப்புகள், பொது நல அமைப்புகள் ஒண்றிணைந்து பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.

    இந்த நிலையில் பவானியை காப்போம் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்த நிறுத்த வலியுறுத்தி பவரிசாகரில் கூடுவோம் என முழக்மிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    இதையொட்டி நாளை 5-ந் தேதி (திங்கட்கிழமை) பவானிசாகர் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதை வலியுறுத்தி பவானி நதியில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த பவானிசாகரில் கூடுவோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    Next Story
    ×