பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்

வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட்டை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com