search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். மையத்தில் முதியவருக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து ரூ.50 ஆயிரம் அபேஸ்- வாலிபர் கைது
    X

    ஏ.டி.எம். மையத்தில் முதியவருக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து ரூ.50 ஆயிரம் அபேஸ்- வாலிபர் கைது

    • வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு வசுவபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (75). இவர் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று சித்தோடு நால்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

    அப்போது பணம் எடுப்பதில் சிரமம் இருந்ததால் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்ட அந்த வாலிபர் பிரபாகரனிடம் ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்துள்ளார்.

    பின்னர் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வருகிறது. எனவே வங்கிக்கு சென்று கேளுங்கள் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். அப்போது பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டை தான் வைத்துக்கொண்டு தன்னிடம் இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை முதியவர் பிரபாகரனிடம் கொடுத்துள்ளார்.

    இதை கவனிக்காத பிரபாபரன் ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே சென்றதும் பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தி அந்த வாலிபர் ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 5 முறை ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.

    அப்போது வங்கி அதிகாரிகள் பிரபாகரனின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது சிறிது நேரத்திற்கு முன்பு 5 முறை மொத்தம் ரூ.50 ஆயிரம் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தனக்கு உதவி செய்வது போல நடித்த வாலிபர் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த பிரபாகரன் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த வினோத்(30) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வினோத் இதே பாணியில் பலரிடம் கைவரிசை காட்டியதும் அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் வினோத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×