search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டையில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை
    X

    அருப்புக்கோட்டையில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை

    • கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தேங்காய் நந்தனம் தெருவை சேர்ந்தவர் முத்துமணி (வயது43), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (35). இவர்களுக்கு முத்து செல்வி என்ற மகளும், செல்வ பாண்டியன் என்ற மகனும் உள்ளனர்.

    முத்துமணி நேற்று பகலில் வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் இன்று காலை வரை திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

    ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் பாலையம் பட்டியில் தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருகே உள்ள செல்வம் என்பவரது தோட்டத்து கிணற்றில் ஒருவர் இன்று காலை பிணமாக மிதந்தார்.

    அதனை பார்த்த தோட்ட உரிமையாளர் செல்வம், அதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை நகர் போலீசார் வந்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டனர்.

    அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்துக்கொன்று கிணற்றுக்குள் உடலை வீசிச்சென்றுள்ளனர். கொன்று வீசப்பட்ட அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்று மாயமான கட்டிட தொழிலாளி முத்துமணி என்பது தெரியவந்தது.

    அவரை யார், எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அவர் பிணமாக கிடந்த கிணற்றின் அருகே ரத்தக்கறை படிந்த பால் கேன் கிடந்தது. மேலும் முத்துமணியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய காயமும் இருந்தது.

    ஆகவே கொலையாளிகள் அவரை கத்தியால் கழுத்தை அறுத்தும், பால் கேனால் தலையில் அடித்தும் கொடூரமாக கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் முத்துமணி பிணமாக கிடந்த கிணறு, தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு துப்பு துலக்கினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. முத்துமணி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதனைத்தொடர்ந்து முத்துமணி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கொலை குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×