டி.என்.பாளையம் அருகே திருமண வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

கொள்ளை நடந்த வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டிற்கு துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
கொள்ளை நடந்த வீட்டிற்கு துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
Published on

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). அரிசி ஆலை அதிபர்.

இவரது மகள் கிருத்திகா என்பவருக்கும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சத்தியமங்கலத்துக்கு சென்று விட்டனர்.

பின்னர் திருமணம் முடிந்ததும் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது அவர்கள் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. ஆறுமுகம், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் பங்களாபுதூர் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

அப்போது கொள்ளையர்கள் சிறிய சந்து வழியாக பக்கத்து வீட்டின் மாடி மீது ஏறி அரிசி ஆலை அதிபர் ஜெயக்குமார் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் திருமண வீடு என்பதால் நகை-பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.

கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

மேலும் துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் ஓடிச்சென்று நின்றது. எனவே கொள்ளையர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள்.

கொள்ளை நடந்த வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com