என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு சேலம் மாவட்டத்தில் 11,108 பேர் எழுதினர்
- 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
- 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும்.
சேலம்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வின் மூலம் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி முதன் முதலாக நடப்பாண்டு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம் கல்வி மாவட்டத்தில் 2,668 பேரும், சேலம் ஊரகத்தில் 2,082 பேரும், சங்ககிரியில் 1,894 பேரும், ஆத்தூரில் 2,385 பேரும், எடப்பாடி கல்வி மாவட்டத்தில் இருந்து 2,522 மாணவர்களும் என மொத்தம் 11,551 மாணவர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது.
தேர்வில் 10ம் வகுப்பு தர நிலையிலுள்ள, தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில், கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டன. இத்தேர்வை 11,108 பேர் கலந்து கொண்டு எழுதினர். விண்ணப்பித்திருந்த 443 பேர் தேர்வெழுத வரவில்லை. அறை கண்காணிப்பாளர், பறக்கும்படையினர் என 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.






