

ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள், கார், டூரிஸ்ட் வேன், சுற்றுலா பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளின் ஓரத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு உணவு உண்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பின்பு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இது குறித்து எச்சரிக்கை பதாதைகள் மூலம் வெளிப்படுத்தினாலும் கூட இது போன்ற செயல்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின் பேரில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் வின்சென்ட் நேரடி பார்வையில் ஒகேனக்கல் வன பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் ஒகேனக்கல் மலைப்பகுதி, வளைவுச்சாலை, வனப்பகுதியில் இருந்து ஆலம்பாடி செல்லும் சாலை வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் மற்றும் பாட்டில்களை எடுத்து மறு சுழற்சிக்காக துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை வனத்துறையினர் ஒப்படை த்தனர்.
இதன் பின்னர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளில் உணவு சமைப்பதோ உணவு உண்ணுவதோ மற்றும் வாகனங்களை நிறுத்தினாலோ வனத்துறையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.