தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம்

தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.
இடமாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார்
இடமாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார்
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.

தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.

இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com