search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
    X

    சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

    • உழவர் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
    • அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 934 விவசாயிகள், பல்வேறு 637 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 237.283 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,402 நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.

    இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.76,83,930 மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட கூடுதல் விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×