search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் கடத்தி 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற கும்பல்: கிராம மக்கள் போராட்டம்
    X

    காரில் கடத்தி 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற கும்பல்: கிராம மக்கள் போராட்டம்

    • மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
    • சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவி மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை மாணவி வழக்கம் போல பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பெற்றோரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    மாலையில் மாணவியின் பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் மாணவி இல்லை. எப்போதும் மாணவி பெற்றோர் வருவதற்கு முன்பே வீட்டிற்கு வந்து விடுவார்.

    ஆனால் நேற்று மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று மகளை தேடி பார்த்தனர்.

    ஆனால் அங்கு அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அச்சம் அடைந்தனர். மகளை காணாமல் தவித்தனர்.

    பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து, அக்கம்பக்கம் உள்ள பகுதிகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தங்கள் மகளாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடினர். அங்கு இறந்த நிலையில் கிடந்த மாணவியை பார்த்தனர். மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்தார். அது மாயமான தங்கள் மகள் என்பதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பைக்காரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தில் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா? என தேடிப் பார்த்தனர்.

    அப்போது, மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. விசாரணையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சிலர் காரில் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என தெரிவித்து மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் ஊட்டி-கூடலூர் சாலையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் காணப்பட்டது.

    உடனடியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நீண்ட நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்தே பொதுமக்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    சம்பவம் குறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கொன்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ரஜ்னேஷ் குட்டன் பிடிபட்டால் மாணவி கொலையில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரியவரும்.

    ரஜ்னேஷ் குட்டனுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ரஜ்னேஷ் குட்டன் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் வனத்துறையினருடன் இணைந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற 9-ம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று காரில் கடத்தி கற்பழித்து கொன்ற சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×