

ஏற்காடு,
சேலம் மாவட்டம் ஏற்காடு ஜெரினக்காடு பகுதியில் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் செயலாளராக பணிபுரியும் பிரகாஷ் என்பவர் அந்த சங்கத்தின் தலைவர் மீது ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், சங்கத்தின் தலைவராக உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த சென்றாயன் என்னையும், டிரைவர் முருகன் என்பவரையும், அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயலாளர் பிரகாஷ் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் அதிரடியாக கூட்டுறவு சங்க தலைவர் அறையின் முன்கதவை பூட்டு போட்டு அடைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கூட்டுறவு சங்கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.