search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது
    X

    கைதான கொள்ளையர்களை படத்தில் காணலாம். 

    கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது

    • கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைத்து திருட முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15 -ந் தேதி மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு ஸ்ரீ நாகம்மாள் கோவில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில், சப் ஜெயில் ரோடு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் கடலூர் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் , ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கும்தாமேடு தரைப்பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் கடலூரில் 4 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரிய வந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் சேர்ந்தவர் சக்தி (வயது 19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் . இந்த நிலையில் சக்தி என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் ரவிச்சந்திரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.

    Next Story
    ×