search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
    X

    அம்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை

    • சிவராமன் பணியை முடித்துவிட்டு ஆலடியூர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் வந்து நிற்கவும், அவரை 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது.
    • எனினும் சிவராமன் அங்கிருந்து வேகமாக சென்று அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மயங்கி விழுந்தார்.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த கோட்டாரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செல்வா என்ற சிவராமன்(வயது 25) தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார்.

    இவர்களது குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான சுடலைமுத்து என்பவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற சிவராமன் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சுடலைமுத்துவின் மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் அழைத்துள்ளார். இடப்பிரச்சினை தொடர்பாக சமரசம் பேசுவோம் என்றும், உடனடியாக வி.கே.புரம் அருகே ஆலடியூரை சேர்ந்த கல்குவாரி அருகில் வருமாறும் கூறி அழைத்துள்ளார்.

    அதனை நம்பிய சிவராமன் பணியை முடித்துவிட்டு ஆலடியூர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் வந்து நிற்கவும், அவரை 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. உடனே சுதாரித்துக் கொண்ட சிவராமன் மோட்டார் சைக்கிளை திருப்பி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓடிச்சென்று வெட்டியதில் அவரது பின்பக்க தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது.

    எனினும் சிவராமன் அங்கிருந்து வேகமாக சென்று அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக அவரது பெற்றோர் வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×