search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க நெல்லையில் வட்டார புத்தொழில் மையம்
    X

    காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க நெல்லையில் வட்டார புத்தொழில் மையம்

    • வட்டார தொழில் மையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் விஷ்ணு.
    • இந்த மையத்தின் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள், குறைந்த செலவில் உலக அளவில் எடுத்துச் செல்லப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் இன்று தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மையத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் நாகஜோதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சபாநாயகர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக அமைக்கப்பட்டதுதான் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் நோக்கமாகும்.

    நெல்லையில் தொடங்கப்பட்டுள்ள மையத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோர்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இந்த மையத்தின் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள், குறைந்த செலவில் உலக அளவில் எடுத்துச் செல்லப்படும். இது தொழில் முதலீட்டாளர்களையும், தொழில் முனைவோர்களையும் இணைக்கும் சிறந்த திட்டமாகும்.

    நாட்டுக்கே வழிகாட்டியான திட்டமாகும். அனைவருக்கும் அனைத்தும் என்ற உயரிய சிந்தனைகளோடு ஒருங்கிணைந்த தொழில் முனைவு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த வட்டார புத்தாக்க மையம் முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்மையத்தின் வளாகத்தில் காணிஇன மக்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவு பொருட்கள், நாட்டு வெல்லம், பழமை வாய்ந்த அரிசி ரகங்கள், கம்பு, சோழம், கேப்பை, கேழ்வரகு, நாட்டு தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பல்வேறு அரங்குகளில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

    Next Story
    ×