search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிழற்குடை இல்லாமல் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதி
    X

    பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி நடந்து வரும் காட்சி.

    நிழற்குடை இல்லாமல் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதி

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்தது வாலாஜா நகரம் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமையும் உடையது.

    வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புகள் வாய்ந்த வாலாஜா நகரத்திற்கான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.

    சிறிய அளவிலேயே இருந்தாலும் இந்த பஸ் நிலையத்தின் வழியே தான் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கான பஸ்கள் வந்து செல்கிறது.

    சுற்றுப்புற கிராமங்களுக்கான அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் கிராமங்களிலிருந்து வேலை நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்கள், பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் இருந்த கடைகளின் முன்பாக வெயில், மழை காலங்களில் ஒதுங்கி நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வாலாஜா நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்து பூமி பூஜையும் போடப்பட்டது.

    பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்காக பஸ் நிலையத்திலிருந்த அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    மழைக்காலம் தொடங்கி விட்டதால் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலைய பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள், பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×