search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்க ஆலோசனை
    X

    சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்க ஆலோசனை

    • சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்கலாம்.
    • உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    கீழக்கரை

    பயிர்களுக்கு கிடைக்கும் நீர், ஊட்டச்சத்து, சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. ரசாயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் ரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன.களை கொல்லிகளை பயன்படுத்து வதன் மூலம் மண் மற்றும் நீரின் தன்மை பாதிக்கப்ப டுகிறது. அங்கக வேளாண் முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் பல்வேறு முறைகளில் களைச் செடிகளை நீக்க முடியும்.

    களை வித்துக்கள் உழவுமுறைக்கு தகுந்தாற்போல் பரவிக் கிடக்கும். பொதுவாக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்டத்தில் 5 செமீ ஆழம் வரை ஊடுருவி இருக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துக்கள் சீராக பரவி இருக்கும். களை வித்துக்களின் பரவுத் தன்மை வளர்ச்சி ஆகியவை உழவு முறையின் அடிப்படை யில் கட்டுப்படுத்தபடு கின்றன.

    சுத்தமான பயிர் வித்துக்களை உபயோகித்தல், புல் வெட்டுதல், மக்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல், வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முறைகளை பின்பற்றினால் களை செடிகளை நீக்க முடியும். பயிர் சுழற்சியில் மண்ணின் வளம் மேம்படுவது மட்டுமல்லாமல் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    சில மூடு பயிர்கள் சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள், தீவனப்பயிர்கள், முள்ளங்கி போன்றவை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக் கூடியவை. இவை நிலத்தை மூடுவதுபோல வளர்ந்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பயிர் வரிசைக்கு இடையில் நிலக்கடலை, தட்டைபயறு, கொள்ளு போன்றவற்றை ஊடுபயிராக வளர்த்தும் களைச் செடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    நிலப்போர்வை நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முளைப்பதை தடுக்க வல்லது. ஒளி ஊடுருவதைத் தடுப்பதால் களைச் செடிகள் கட்டுப்படுத்த படுகின்றன. வைக்கோல், புல், மரப்பட்டை, மக்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நில போர்வையாக பயன்படுத்த லாம். வைக்கோல், புல் விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மக்கக்கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்துார மரங்களின் இலை, பனை ஓலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அங்கக மூடாக்கு நிலப்போர்வை அமைத்து ஆண்டு முழுவதும் களைகள் பெருகாமல் கவனித்து கொள்ளலாம்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் மேற்பரப்பில் உள்ள களை விதைகளை அழிக்கமுடியும். இதில் பிளாஸ்டிக் விரிப்புகளை உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    பயிர் பாகங்களில் குறிப்பாக வேர்ப்பகுதியில் சுரக்கும் ஒருவித வேதி பொருள் களையை வளர விடாமல் தடுக்கிறது. உதாரணமாக சோளம், மக்காசோளம், வெள்ளரி, கடுகு, சூரியகாந்தி மற்றும் சோயாமொச்சை ஆகிய பயிர்களை களை தடுப்பு பயிராக பயன்படுத்தலாம். இவ்வாறு மேற்கொண்ட உத்திகளை பயன்படுத்தி அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×