

ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சியின் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011-ம் ஆண்டு திருச்சி நங்கநல்லூர் பகுதி காவிரியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரம் குழாய் மூலம் ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வருகிறது.
குடிநீர் வடிகால் வாரியம் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் நகராட்சிக்கு தினமும் 31லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலைமையில் திருச்சி காவிரி குடிநீர் கடந்த 27ந்தேதி திருப்பத்தூர் அருகே குழாய் சேதமடைந்து வினியோகம் பாதிக்கப்பட்டது.
அதனை சரி செய்த பிறகும் தண்ணீர் குறைந்த அளவே வருகிறது. நகருக்கு 33லட்சம் லிட்டருக்கு பதிலாக 20லட்சம் முதல் 25லட்சம் லிட்டர்தான் கிடைக்கிறது. இதனால் அனைத்து வார்டுகளுக்கும் முழுமையாக குடிநீர் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில வார்டுகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் பற்றாக்குறையின்றி ஒதுக்கப்பட்டுள்ள அளவு குடிநீரை முழுமையாக பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.