search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள்
    X

    கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள்

    • கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து நிலுவையில் உள்ளன.
    • கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.

    கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதிமன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.

    கடந்த ஆண்டு வரை மட்டும் 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5பேர், திருட்டு வழக்கில் 3பேர் என்ன 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்றனர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×