search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளூர்,  பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
    X

    தேவர் குருபூஜை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை மற்றும் பலர் உள்ளனர்.

    உள்ளூர், பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்கம்

    • தேவர் குருபூஜை விழாவையொட்டி உள்ளூர், பிற மாவட்டங்களில் இருந்து 250 பஸ்கள் கூடுதலாக இயக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலையில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போதிய எண்ணிக்கையிலான கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க 'நிர்வாக நடுவர்கள்' நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிர்வாக நடுவர்கள் சட்டம்-ஒழுங்கு ஏற்படும் சமயத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அலுவலர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.

    பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசு பஸ்களில் ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு போலீசாரை நியமிக்க வேண்டும்.

    தனி நபர்கள் அமைக்கும் அன்னதான பந்தலின் உறுதித்தன்மையை சரி பார்க்க வேண்டும். நினைவி டத்தின் மேற்குப்புறம் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்புவேலி அமைக்க வேண்டும்.

    கோட்டை மேடு வளைவு முதல் நினைவிடத்தில் உள்ள வளைவு வரை தற்காலிக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். குருபூஜை விழாவிற்கு வரும் மக்கள் காலணிகள் அகற்றுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும். நுழைவு பகுதிகளிலிந்து வெளிப்பகுதி வரை சாலை செப்பனிடும் பணி அனைத்தும் விரைவில் முடித்திருக்க வேண்டும்.

    பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்த வேண்டும். 29 மற்றும் 30-ந் தேதிகளில் 200 மற்றும் 250 பஸ்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்க வேண்டும்.

    சுமார் 19 இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், அவைகளை உடனே சரிசெய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ஜெனரேட்டர், மற்றும் பாதுகாப்பு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைகள் அருகில் கண்டிப்பாக மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பசும்பொன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அலுவலர்கள் நாளை (27-ந் தேதி)க்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், ராமநாதபுரம் கோட்டாட்சியர் மரகதநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், அருண் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×