தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரம்

தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடி பயன்படுத்தக் கூடாது
தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரம்
Published on

புதுக்கோட்டை:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் எடுத்து வருகிறார்.

இதில் புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக கதர் துணியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குமார் என்பவர் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடி பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து கதர் மற்றும் பாலிஸ்டர் துணியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணி இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த ஆண்டு தேசியக்கொடி அதிக அளவில் ஆர்டர் வந்துள்ளது. 3 விதங்களில் தயாரிக்கப்படும் தேசிய கொடி ரூ.100 மற்றும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர சிறிய அளவிலான தேசியக்கொடிகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கதர் விற்பனையை ஊக்குவிப்பதற்கு வரும் காலங்களில் ஏற்கனவே பிளாஸ்டிக் கொடியை ஒழித்தது போன்று பாலிஸ்டர் துணியால் ஆன தேசிய கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து முழுமையாக கதர் துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில, அரசுகள் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com