search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
    X

    ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

    • ஆம்பூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா ஆம்பூர்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மதியம் மற்றும் இரவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து பால்குடம், காவடி, அக்னிசட்டி, எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் அம்மன் பாதத்தில் பாலை ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.இரவு 10 மணியளவில் கோவில் முன்பு உள்ள கலையரங்கில் பாண்டிசாமி என்னும் புராண நாடகம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் ஆம்பூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆம்பூர்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×