

அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கிராமத்தில் உள்ள புனித சந்தனத்தாய் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் ஆடி மாதம் 5ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நேற்று நடைபெற்றது. தஞ்சை மறை மாவட்ட, பங்கு தந்தை சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மைக்கேல், செபஸ்தியார், சந்தியாகப்பர், பழைய சந்தன மாதா, சந்தன மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய, மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் சப்பரங்கள் வலம் வந்த போது ஏராளமான பொதுமக்கள் வணங்கினர். அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பங்கு பணியாளர் ஜோதி நல்லப்பர் உள்ளிட்ட பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.