சத்தமின்றி சாதனை படைத்து வரும் திருமயம் ஓவியர்

தஞ்சை ஓவியக்கலையில் சத்தமின்றி சாதனை படைத்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஓவியர்ஓவியக்கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை
சத்தமின்றி சாதனை படைத்து வரும் திருமயம் ஓவியர்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மணவாள அண்ணாநகரை சேர்ந்தவர் சி.காத்தான். இவர் தஞ்சை பெயிண்டிங் போர்டு தயாரிக்கும் பணியில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.

சத்தமின்றி சாதனை படைத்து வரும் சி.காத்தான் பல கலைஞர்களை உருவாக்குவதே தனது நோக்கம் என கூறுகின்றார்.

இவரிடம் சென்னை, திருச்சி, செட்டிநாடு, கோயம்புத்தூர், ஹைதராபாத் போன்ற ஊர்களிலிருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

இதன் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3000லிருந்து பல லட்சம் வரை நீடிக்கிறது. சுத்த தங்கத்தில் தகடு செய்து வைப்பதால் தங்கம் விலை நிர்ணயித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

பெரும்பாலும் கிருஷ்ணர், விநாயகர்,பெருமாள் படங்கள் தஞ்சை பெயிண்டிங்கில் தயாரிக்கின்றார். மேலும் இவர் தயாரித்துள்ள காமதேனு,நரசிம்மர் ஓவியங்கள் அவரது கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தனது கலை திறமையை அப்பகுதி இளைஞர்களுக்கு சொல்லி தருகின்றார்.

மேலும் அவருடன் 6 பெண்கள் தொடர்ச்சியாக பயிற்சி பெற்று தயாரிப்பு பணியில் உதவி செய்து வருகின்றனர்.

இவர் ஓவியங்களை புதுக்கோட்டையை சேர்ந்த ஓவியர் ராஜா பாலசுப்பிரமணியன் போன்றவர்களிடம் பயின்றுள்ளார்.

ஓவியத்தின் மீது ஆசையால் தனது வாழ்க்கை துணையாக ஓவிய ஆசிரியர் பேபி தமிழரசியை திருமணம் செய்துள்ளார். அவரும் இவருடைய கலை திறமைக்கு உதவியாக உள்ளார். இவரின் தஞ்சை பெயிண்டிங் ஓவியம் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளது, புதுக்கோட்டை மக்களுக்கு மதிப்பை கூட்டி தரும் என்பதில் ஐயமில்லை.

தற்போது உள்ள நவீன உலகில் ஓவிய கலை நலிவடைந்து வரும் வேளையில் காத்தான் போன்ற ஓவியர்கள் தொடர்ந்து ஓவிய கலையை வளர்த்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு அரசு தன்னால் ஆன உதவி சிறுசிறு உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் ஓவிய கலைஞர்கள்.

குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு 5 படங்களை தயாரிக்கிறார் காத்தான்.

தான் வருமானத்திற்காக இக்கலையை செய்ய வில்லை. ஓவிய கலையையில் முன்னணி நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தஞ்சை பெயிண்டிங் சி.காத்தான் ஆர்வத்துடன் கூறுகிறார். புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் நபர்களில் சி.காத்தானும் ஒருவர் என்றால் மிகையல்ல.

X

Maalai Malar
www.maalaimalar.com