search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிபாளையம் பகுதியில் மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ வாலிபர் கைது
    X

    பள்ளிபாளையம் பகுதியில் மூதாட்டிகளை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ வாலிபர் கைது

    • கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்.
    • கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி வண்ணாம்பாளையம் பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, கரும்பு காட்டுக்குள் பாவாயி (வயது 70) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்தார். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்பவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். 2 மூதாட்டிகளும் தனியாக வசித்து வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 சம்பவமும் ஒரே மாதிரியாக இருந்ததால், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 மூதாட்டிகளையும் கொடூரமாக கொலை செய்தது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் போதையில் இருக்கும் செல்வம் சைக்கோ போல் சுற்றித்திரிந்துள்ளார். காட்டு வேலைக்கு மட்டும் செல்வார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஓடப்பள்ளி பகுதி பக்கமாக சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் சந்தேகிக்காதபடி எப்போதும்போல் காட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இதையடுத்து, கடந்த 12-ந் தேதி அண்ணாநகர் அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த பழனியம்மாளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது காதில் இருந்த தங்க தோட்டை திருடி சென்று விட்டார்.

    இது தொடர்பாக செல்வத்தை தேடி வந்தோம். அவனிடம் செல்போன் இல்லை, இதனால் கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று செல்வத்தை கைது செய்தோம்.

    கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான செல்வத்தை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    Next Story
    ×