search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சூரில் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி போராட்டம்
    X

    மஞ்சூரில் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி போராட்டம்

    • மதுக்கடையால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.
    • மதுபான கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.

    இதை தொடர்ந்து மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் சார்பில் டாஸ்மாக் மதுபான கடையை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டதுடன் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி மேற்படி பகுதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை தொடர்ந்து குடியிருப்புவாசிகள், மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம், மஞ்சூர் சிறு வனிகர்கள் நலச்சங்கம், மஞ்சூர் ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் டாஸ்மாக மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமைகள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் அன்னமலை முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகி கேப்டன் ராமச்சந்திரன், சிறு வனிகர்கள் நலச்சங்க நிர்வாகி ஆறுமுகம், ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் துரை, குந்தை சீமை படுகர் நலச்சங்க தலைவர் சந்திரன், ெபண்கள் உரிமை விழிப்புணர்வு நிர்வாகி சாரதா, அனைத்து படுகர் கூட்டமைப்பு நிர்வாகி சிவன், சமூக நீதி விழப்புணர்வு இயக்க நிர்வாகி மணிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

    இதில் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து பல்வேறு வகையிலும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊட்டி ரூரல் டி.எஸ்.பி.செந்தில்குமார், ரூரல் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாஸ்மாக் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பொதுநல அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று மஞ்சூர் அரசு மதுக்கடை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×