

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான பொதுக்குழுக்கூட்டம் பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் அருள்ராஜா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கடலில் கலக்காமல் சிறு குறு தொழிலுக்கு இலவசமாக வழங்க வேண்டும், அனல் மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் 20 சதவீத உலர் சாம்பல் உள் ஒதுக்கீட்டினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், உலர் சாம்பல் உற்பத்திக்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் கொடுத்துள்ள இடைக்கால தீர்ப்பை அமல்படுத்தி செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உலர் சாம்பல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உட்பட சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள உலர் சாம்பல் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கழிவாக வெளியேற்றப்படும் சாம்பலை சிறு-குறு தொழிலுக்கு இலவசமாக வழங்காமல் கடலில் கரைக்கப்படுகிறது இதற்கு டன் ஒன்றுக்கு 500 ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.
மேலும் சாம்பலை இலவசமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டது. தேர்தலை சங்கத்தின் நிறுவனர், பொருளாளர் மற்றும் தேர்தல் அதிகாரியான சென்னியப்பன் நடத்தினார். இதில் தூத்துக்குடி மண்டல புதிய தலைவராக முருகன், செயலாளராக அரவிந்த், பொருளாளராக முகமதுகான் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவர் ராகவன், மாநில, மண்டல, மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.