search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர்
    X

    பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர்

    • சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.

    இவரது மனைவி மரகதம் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மரகதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மரகதத்திடம் வீட்டில் தோஷம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாந்திரீகம் செய்தால் தோஷம் நீங்குவதுடன், வியாபாரத்தில் பண வரவு கூடும் என ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய அவர் அந்த வாலிபரை மாந்திரீகம் செய்து தருமாறு வீட்டிற்குள் அழைத்து சென்றார். வீட்டிற்குள் சென்றதும் அந்த வாலிபர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏதோ வசிய மருந்தை மரகத்தின் நெற்றில் தேய்த்து உள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் சுய நினைவை இழந்தார். அப்போது அந்த வாலிபர் மரகதம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினார். சுயநினைவை இழந்த அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் செயினை கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் பீரோவில் வைத்து இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தையும் அந்த வாலிபரிடம் எடுத்து கொடுத்து உள்ளார். செயின் மற்றும் பணத்துடன் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் மரகதத்தின் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி சுயநினைவு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்த பின்னர் மரகதம் சுயநினைவுக்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவரிடம் நடத்த சம்பவங்களை கூறினார்.

    இது குறித்து அவர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை சுயநினைவு இழக்க செய்து பணம் மற்றும் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×