search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு தொழிலாளியிடம் போலீசார் விசாரணை
    X

    பொன்னுரங்கம்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு தொழிலாளியிடம் போலீசார் விசாரணை

    • மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
    • விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (வயது 78). இவர் அதே பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள்கள் பிரசன்னா, பிரகாஷவாணி, திரவியம். மகன்கள் விஜயகுமார், சதானந்தம். பொன்னுரங்கன் மகன்கள் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரைவீரனுடன் திரவியத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் மதுரைவீரனுக்கும் திரவியத்திற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் திரவியம் தனது குழந்தைகளுடன் நத்தாமூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். திரவியத்திற்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவது இருந்து வந்தது. இதனால் திரவியம் மன உளைச்சளில் இருந்தார். நேற்று திரவியத்தின் பெற்றோர் மதுரைவீரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டினுள் திரவியம், மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, மற்றும் விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான். வீட்டிற்கு வெளியே மதுரைவீரனுடன், பொன்னுரங்கம், விஜயகுமார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் பதறிஅடித்து கொண்டு உள்ளே சென்ற பொன்னுரங்கம், விஜயகுமார், சதானந்தம் அங்கு தீயில் கருகி எரிந்து கொண்டிருந்த திரவியம் மற்றும் மகள்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அணைக்கமுடியவில்லை.

    இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே திரவியம் மற்றும் அவரது மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரிஆகியோர் உடல் கருகி இறந்தனர். பலத்த படுகாயம் அடைந்த விவேக்கை பொன்னுரங்கம் போராடி மீட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் விவேக்கை போராடி மீட்ட பொன்னுரங்கம் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுதிணறி இறந்தார். மேலும் வீட்டின் வெளியே வந்த விஜயகுமார் மற்றும் விவேக் புகை மண்டலத்தில் சிக்கி மயங்கி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் வீடு முழுவதும் தீக்கிரையானது. இதை பார்த்த வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதிர்ந்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்த விவேக் மற்றும் விஜயகுமார், சந்தான ந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார், விவேக்கை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீ விபத்தில் உயிரிழந்த திரவியம் மற்றும் ரியாஷினி, விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து திரவியம் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதில் இந்த தீ விபத்து நடந்ததா ? அல்லது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்ததா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திரவியம் கணவர் மதுரைவீரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×