என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. , மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.
தஞ்சையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி
- பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
- இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் இன்று அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.
இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.
இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் சத்தியா, முன்னாள் கவுன்சிலர் வீரையன், ஒன்றிய செயலாளர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பகம் ஆனந்த பிரபு நன்றி கூறினார்.