

மேலசொக்கநாதபுரம்:
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுவது பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் வீசும்.
ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மணி என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இந்த அற்புத பிரம்ம கமலம் பூவை கடந்த ஒரு வருடமாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் நள்ளிரவில் பிரம்ம கமலம் செடிகளில் இருந்து சுமார் 5க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்க தொடங்கின. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அந்த பூக்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பிரம்ம கமலம் பூக்களை அதிசயமாக பார்த்து வழிபட்டு சென்றனர்.