

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது.
அதன் பின்பு எந்த அரசும் முன்னெடுக்காததால், தற்போது மண் பாதையாகவும், குண்டும் குழியுமான சாலையாகவும் மாறி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இப்பகுதி மக்கள், சாலை வசதி வேண்டி தேர்தலை புறக்கணித்து வீடுகளின் மேல் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், தேர்தல் முடிந்தவுடன் சாலை வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர்.
ஆனால் தற்போது வரை சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படாததால் இப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு அளித்தனர்.
விரைவில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரவில்லை எனில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிபுகும் போராட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடத்துவோம் என தெரிவித்தனர்.