search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது-விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது-விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி

    • அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 41 அடியாக இருந்த நிலையில் நேற்று 44 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேலும் 4 அடி உயர்ந்து 48.30 அடியானது. அணையில் 2 நாட்களில் சுமார் 10 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 50 அடியை நெருங்குவதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 8 அடி அதிகரித்து 73.46 அடியாக உள்ளது. தொடர்ந்து 2 அணைகளுக்கும் நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரையிலும் விடிய விடிய பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 21.6 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினாரில் அதிகபட்சமாக 50 மில்லிமீட்டரும், குண்டாறில் 36.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 28.50 அடியாக இருந்த நிலையில் இன்று 5 அடி உயர்ந்து 33.50 அடியானது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 33 அடியாக இருந்த நிலையில், இன்று 40 அடியாக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தின் பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினாரில் நேற்று 49 அடி நீர் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 26.75 அடியாக உள்ளது.

    Next Story
    ×