search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன்

    கிராம நிர்வாக அலுவலர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது

    • லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடந்தது.
    • புதுக்கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

    நேற்று அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்

    இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சத்யராஜ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தாமிரபரணி ஆற்றில் இருந்து கலியாவூரை சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முறப்பநாடு போலீசில் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்ததன்பேரில், கடந்த 13-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த முன்விரோதத்தில் ராமசுப்பிரமணியனும், அவரது கூட்டாளி மாரிமுத்து என்பவரும் சேர்ந்து லூர்து பிரான்சிசை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலம் மாரிமுத்துவை தேடி வந்த நிலையில், அவர் நெல்லை தாழையூத்து பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அறிந்த கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தை அறிந்து, உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரிக்கு வந்து, லூர்து பிரான்சின் ஈமச்சடங்கிற்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

    இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடந்தது. பின்னர் அவரது உடல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதா கிருஷ்ணன் முன்னிலையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியா புரத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள புனித ராயப்பர் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி நடைபெறுகிறது. அதன்பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    Next Story
    ×